Wednesday, August 08, 2018

3.5 உழவர் வாழ்க்கை

  • 3.5 உழவர் வாழ்க்கை
    உழவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்ட முக்கூடற் பள்ளுவில், பள்ளன், பள்ளி ஆகியோரிடம் நடைபெறும் சண்டைகளும், பிறவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
    • மூத்த பள்ளியின் முறையீடு

    மழை வெள்ளம் வந்து ஆற்றில் நீர் பெருகி உழவு வேலை தொடங்கும் சூழ்நிலை உருவாயிற்று. இந்நிலையில் பள்ளன் இளைய பள்ளியிடம் காதல் கொண்டு வேலை மறந்து கிடக்கிறான். இதனால் மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறை இடுகின்றாள்
    ஆட்டுக்கிடைக்குக் காவலாகப் போக வேண்டிய பள்ளன் இளையாளைப் பிரிய மனம் இன்றி அவள் குடிசையிலேயே தங்கி விட்டான் ஆண்டே! (ஆண்டே = ஆள்பவர்/தலைவர்) இப்படி அவளுடன் படுத்துக் கிடக்கும் பள்ளன், பண்ணை வேலைகளைக் கெடுத்துவிடும் கள்ளன் ஆவான். அவளுக்காக மடலேறவும் (விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளப் பழங்காலத்தில் ஆண்கள் மேற்கொண்ட ஒரு வழக்கம் மடலேறுதல்) துணிந்தவன். காமப்பேய் பற்றி இருக்கும் உடலினை உடையவன். அவனுடைய கள்ளத்தனமான செயல்களை இன்னமும் நீர் அறியாது இருக்கின்றீர். இவனைச் சிறையிலே போட்டால்தான் வேலையிலே ஈடுபடுவான் ஆண்டே (முக்.பள். 85, 86)
    வரவை மீறிச் செலவு செய்பவனுக்குத் தரித்திரந்தான் வளர்ந்து கொண்டே போகும். கூத்தாட்டக்காரர்களுக்கும் கொட்டுக்காரர்களுக்கும் வாரி வாரி வழங்கி ஊதாரி ஆகிவிட்டான் ஆண்டே! காளை மாடுகள் சிலவற்றை அந்தப் புதியவனுக்குத் தந்து விட்டான். மற்றும் சிலவற்றை வில்லடிப் பாட்டுக்காரனுக்கு அளித்து விட்டான். பரத்தியிடம் (நெய்தல் நிலப்பெண்) வாங்கிய கருவாட்டிற்கும் கள்ளிற்கும் பணம் கொடுப்பதற்காக இருந்த ஐந்து பசு மாடுகளையும் கொண்டுபோய் விற்றுவிட்டான். இப்படிச் செய்வது அவமானம் அல்லவா என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டான். ஆண்டையே! இவன் இரண்டு கால்களிலும் விலங்கைப் பூட்டி வைப்பீரே! (முக்.பள். 87).
    இவன் பலராலும் ஏசப்படுவதற்கு என்றே வந்து பிறந்தானோ? வரவரக் கூச்சம் என்பதையே கூட மறந்துவிட்டான். வயலில் உழுவதைப் பற்றி இவன் கொஞ்சமும் நினைப்பது இல்லை. என்னைத் தேடி ஒரு கனைப்புக் கூடக் கனைப்பது இல்லை. (முக்.பள். 91).
    அவளுக்கு மீனைக் கொண்டு போய்க் கொடுப்பான். கருவாட்டு ஊனைக் கூட எனக்குக் காட்டாமல் அவளுக்கு மறைத்துக் கொண்டு போவான். நான் ஏதாவது சொன்னால் வீம்புக்காக என்னைப் போட்டு அடிப்பான். அவள் சொன்னால் பாம்பையும் கூடப் பிடிப்பான். இவ்வாறு மூத்த பள்ளி முறையிடுவதைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:
    மீனைக் கொண்டு அளிப்பான் - கருவாட்டு
    ஊனைக் கொண்டு ஒளிப்பான் - நான் சொன்னால்
    வீம்புக்கு அடிப்பான் - அவள் சொன்னால்
    பாம்பையும் பிடிப்பான்
                                     (முக்.பள். 90)
    (ஊன் = தசை)
    இவ்வாறாக மூத்த பள்ளி பலவாறாகப் பள்ளன் மேல் முறையீடு செய்கிறாள். இதனால் பண்ணைக்காரன் சினம் கொள்கிறான். திருமுக்கூடல் அழகர் ஏரிப் பற்றுகளிலே நீ ஆடு வைத்துத் தந்த விதமோ? மருதூர்ச் சங்காத்தி (சங்காத்தம் - நட்பு) வீட்டிலே கிடந்து உறங்கிய உறக்கமோ? நின் நெஞ்சைத் தொட்டுப் பாரடா? என்று சொல்லிப் பண்ணைக்காரன் சினத்தால் கண்கள் சிவந்தவனாகிறான். அங்கே வந்த பள்ளனின் காலிலே மரக்கட்டையைச் (தண்டனைக் கருவி) சேர்த்து அவனைக் காவலில் வைக்கிறான். பின்னர் மூத்த பள்ளி மனம் இரங்கி வேண்டப் பண்ணைக்காரன் பள்ளனை விடுவிக்கிறான்.
    3.5.1 பள்ளரின் தொழில்
    பள்ளன் விடுதலை ஆனவுடன் உழவுத் தொழில் தொடங்குகிறது. உழவு முகூர்த்தம் செய்வதற்காகச் சோதிடர்கள் நல்ல நாள் குறிக்கிறார்கள். சப்தமி திதியும், (சப்தமி நாள்) புதன்கிழமையும், சுவாதி நட்சத்திரமும் கூடிய நல்ல நாள் குறிக்கப்படுகிறது. இந்த நல்ல நாளில் நாள் ஏர் பூட்டப் பள்ளன் செல்கிறான். (முக்.பள். 114)

    சாத்தன், பெரியான், கூத்தன் முதலாகச் சேரியிலுள்ள பள்ளர் எல்லாம் கூடிக் குரவை இட்டு ஏர்மங்கலம் பாடி நாளேர் பூட்டி உழவைத் தொடங்கினார்கள் (முக்.பள். 115). ஏர்பூட்டி உழுது பின்பு அங்குள்ள பள்ளர்களை எல்லாம் கூப்பிட்டான், பள்ளன். எல்லோருடனும் கூடித் தொழுது தெய்வக் கடன்களை எல்லாம் செய்து கழித்தான்.
    அதன்பின் விதைகளை எடுத்துத் தெளிக்கத் தொடங்கினான். (முக்.பள். 121) விதைகள் முளைக்கத் தொடங்கின. நாற்றுகள் வளர்ந்தன. முறையாகத் தண்ணீர் விடப்பட்டது. அழகருடைய முக்கூடல் நகரிலே நாற்று நடுவதற்குரிய நாள் குறிக்கப்பட்டது. உழத்திகள் முக்கூடல் அழகரின் திருப்பாதங்களை வணங்கினர். நாற்று முடிகளை எடுத்து நெற்றியிலே வைத்துக் கொண்டு நாலுதிசையும் நோக்கி வாழ்த்திக் கும்பிட்டார்கள். பிறகு வயலில் நடத் தொடங்கினர். (முக்.பள். 125).
    பதிந்த நடவுகள் தேறிப் பசுமை நிறம் கொண்டன. பின்பு குருத்து அடர்ந்து நிலத்தில் பரந்து செறிந்தன. கதிர் விட்டு முற்றின. கதிர்கள் எல்லாம் நன்றாக முற்றி விளைந்த செய்தியைப் பண்ணைக்காரனிடம் பள்ளன் சென்று சொன்னான். பின்பு அறுவடைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நாட்கதிர் கொள்வதற்குத் தெய்வ வழிபாடுகளைச் செய்தனர். உரிய பொருள்களையும் படையலாக இட்டனர். (முக்.பள். 138)
    பின்பு கதிர்களைக் கட்டிக் கொண்டு வந்து எருமைகளை விட்டுக் கதிர் அடித்தனர். தூசிகளைத் தூற்றித் தூய நெல்மணிகளைக் குவித்துப் 'பொலிபொலி' என்ற மங்கல ஒலியோடு அளந்து கட்டினர் (முக்.பள். 139). எது எதற்கெல்லாம் நெல் அளந்து கொடுக்கப்பட்டது என்பதைப் புலவர் பட்டியல் இட்டு உள்ளார்.
    அடியார்க்குச் சோறிடும் தினச்சத்திரம் பெரியநம்பி அய்யங்காருடைய திருமாளிகைச் செலவு ஏழு திருப்பதிகள் காவை வடமலையப்பப் பிள்ளையன் மடம் முதலியவற்றிற்கு நெல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆடித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் பங்குனித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் மண்டகப்படி (திருவிழாக்காலங்களில் செய்யும் செலவு) சாத்து (கடவுளுக்கு மாலை முதலியன அணிவித்தல்) வகைகளுக்கு 1000 கோட்டைகள் நா வாணர்களுக்கும் மறையவர்களுக்கும் (அந்தணர்) 4000 கோட்டைகள் தினப்பூசைக்கு 8000 கோட்டைகள் (முக்.பள். 141-149) இவ்வாறாக வயல் வேளாண்மை முடிந்து நெல் பங்கிட்ட முறை விளக்கப்பட்டுள்ளது.
    3.5.2 உழவுத் தொழிலின் ஆதாரம்
    உழவுத் தொழிலைத் தொடங்குவதற்கு மழை வேண்டும். உழவர்கள் / பள்ளர்கள் மழை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். மழை பெய்வதற்கான அறிகுறியும் தோன்றுகிறது. அது மிகவும் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.
    • மழை வழிபாடு
    அழகருடைய நல்ல நாட்டிலே மழை வளம் சிறக்க வேண்டும் என்று மன்னர்கள் வழிபாடு நடத்துகின்றனர்; மழை வரம் வேண்டுகின்றனர்; சேரியிலே குரவை ஒலிக்கத் தெய்வத்தைப் போற்றினர் (முக்.பள். 32)
    பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர். குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர். கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர். புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர். சாராயத்தையும், பனையில் இருந்து இறக்கும் கள்ளையும் வடக்குவாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர். பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். பண் பாடிப் போற்றினர். கூத்தாடித் தொழுதனர். அழகரின் திருநாமங்களை ஏத்தினர். (முக்.பள். 33, 34) (பூலா உடையார், கரையடிச் சாத்தான், புலியூர் உடையார், செல்லி - நாட்டுப்புறத் தெய்வங்கள்)
    • மழை அறிகுறி
    பள்ளர்கள் அனைவரும் மழை வேண்டித் தெய்வங்களை வழிபட மழைமேகம் சூழ்ந்தது. மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின.
    நண்பர்களே! இந்த மழைக் குறி பற்றிப் புலவர் பாடிய பாடல் சிறந்த இசைநயமும் அழகுணர்வும் கொண்டது. அறிவியல் செய்தி பொதிந்தது. நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை விவரிக்கும் பாடல் வருமாறு:
    ஆற்று வெள்ளம் நாளை வரத்
    தோற்றுதே குறி - மலை
    யாளமின்னல் ஈழமின்னல்
    சூழ மின்னுதே
    நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
    காற்று அடிக்குதே - கேணி
    நீர்ப்படு சொறித் தவளை
    கூப்பிடுகுதே
    சேற்று நண்டு சேற்றில் வளை
    ஏற்று அடைக்குதே - மழை
    தேடி ஒருகோடி வானம்
    பாடி யாடுதே
    போற்றுதிரு மால்அழகர்க்கு
    ஏற்றமாம் பண்ணைச் - சேரிப்
    புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
    துள்ளிக் கொள்வோமே

    (முக்.பள். 30)

    3.5.3 விதை வகைகளும் மாட்டு வகைகளும்
    உழவர்கள் பயன்படுத்திய நெல்விதைகளைப் பற்றியும், மாட்டுவகைகளைப் பற்றியும் விரிவான செய்திகள் இடம் பெற்றுள்ளன.
    • விதை வகைகள்
    முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து (விதை), மாடு, ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறிய முடிகிறது. சீரகச் சம்பா, நெடுமூக்கன், மூங்கிற் சம்பா, கருங்குறுவை, புனுகுச் சம்பா, பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல்விதை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன (முக்.பள்.109).
    • மாட்டு வகைகள்
    மேலே கூறப்பெற்ற பெயர்கள் நெல்வகையின் பெயர்களாகும். இதைப் போல் மாட்டுவகைகளுக்கும் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடைக் கொம்பன், குத்துக் குளம்பன், கூடு கொம்பன், மயிலை, மட்டைக் கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை முதலிய இருபதுக்கும் மேலான பல்வகை மாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன (முக்.பள். 110). இப்பெயர்கள் மாட்டு வகைகளைக் குறிக்கும்.
    3.5.4 பள்ளியர் ஏசல்
    அறுவடைக்குப் பின் ஒவ்வொருவருக்கும் உரிய நெல் பங்குக் கணக்குகளைக் கூறிவந்த பள்ளன் மூத்த பள்ளி கணக்கை மட்டும் விட்டுவிட்டான். இதனால் மூத்தபள்ளி பள்ளன் மீதிலே கொடுமை சொல்லத் தொடங்கினாள். ''குடும்பன் மிகவும் கெட்டிக்காரன்! அவன் செய்த கர்வ மிகுந்த செயல்களையும் வஞ்சகமான செயல்களையும் நீங்களே கேளுங்களடி பள்ளியர்களே! பள்ளனுக்கு எப்போதும் அந்த மருதூர்ப் பள்ளி மீதுதான் ஆசை. பிள்ளையார் அடி வயலிலே (நெல் விளையும் வயல்களுக்கு வழங்கப்படும் பெயர்) உறை நெல் (உணவுக்குரிய நெல்) எடுத்தான். அதை அவள் கூலி நெல்லுடன் கலந்து அவள் பெட்டியிலே வைத்து விட்டான். எனக்குள்ள பங்கைக் கூட எனக்குத் தராமல் எல்லாவற்றையும் உழப்பிப் போட்டுவிட்டான். மண்ணும் கல்லும் அதனோடு கொஞ்சம் நெல்லும் கல்லும் பங்கு தந்தோம் என்று பேருக்கு எனக்குத் தந்தானடி பள்ளியரே'' என்று முறையிட்டாள் (முக்.பள். 150-152).
    இதனைக் கேட்ட இளைய பள்ளி, ''பள்ளியரிடம் முறையிட்டு என்னைப் பழித்து என்னடி பேச்சு முக்கூடற்பள்ளி, உன் பழைய செல்வம் எதையாவது எனக்குக் கொடுத்தானோ? தொண்டை கட்டிப் போகும்படி கூவாதேடி'' என்று திருப்பித் திட்டுகிறாள் (முக்.பள். 153).
    நாவி (புனுகுபூனை) என்றாய்! பூனை என்றாய்! மருதூர்ப்பள்ளி! இந்த நாவி நான்தானடி; பூனை மட்டுமல்ல, மூளி (அழகில்லாத / குறை உடைய) நாயும் நீதானடி.
    சாகத்துடிப்பவள் போல் ஆட்டம் போட வேண்டாம் முக்கூடற் பள்ளி! மிஞ்சிப் பேசில் நெஞ்சை யறுப்பேன் அஞ்சிப் பேசடி!
    மருதூர்ப் பள்ளி! உன்னைப் போல மந்திரமும் தந்திரமும் எனக்கு வகையாக வந்ததானால் பள்ளன் எனக்கு வசமாக மாட்டானோ?
    சந்தியில் கிடக்கும் மாங்கொட்டையடி நீ முக்கூடற் பள்ளி! உன்னைப் போலச் சாரங்கெட்ட மருதூர்க்காரி என்றோ என்னையும் நினைத்தாய்? (முக்.பள். 160)
    3.5.5 பிற செய்திகள்
    இதில் முக்கூடற்பள்ளு காட்டும் அக்காலச் சமயநிலையும் இலக்கியச் சிறப்பும் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக ஒருவர்க்கு ஒருவர் ஏசிக்கொள்ளும் பள்ளிகளின் ஏசல் இறுதியில் சமயச் சண்டையாக/சமயப்பூசல் ஏசலாக மாறுகிறது. சிவனை ஒருத்தியும் திருமாலை ஒருத்தியும் பழித்து உரைக்கின்றனர்.
    ஏசலில் சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல், அவதாரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.
    அவதார நிகழ்ச்சிகள் குறிக்கப்படுவதில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு அவதாரத்தில் உள்ள நிகழ்ச்சியை வேறொரு அவதாரத்தின் பெயரால் சுட்டப்படுவதைக் கூறலாம். உதாரணமாக அகலிகை நிகழ்ச்சி இராமாவதாரத்தில் வருகிறது. ஆனால் பாடல் அகலிகைக்கு விமோசனம் கொடுத்தவன் கண்ணன் என்று குறிப்பிடுகிறது.
    சாதிக்கிற தந்திரம் எல்லாம் உனக்குத்தான் வரும் மருதூர்ப்பள்ளி! நரிகளைப் பரிகளாக மாற்றிச் சாதித்தவன் உங்கள் சிவபெருமான் தானடி; இப்படிப் பேசிச் சாதிக்க வருகிறாய் முக்கூடற் பள்ளி! கல்லையும் பெண்ணாகச் சாதித்தவன் உங்கள் கண்ணன் தானடி (முக்.பள். 162).
    பெண் ஒருத்திக்காக ஆசைப்பட்டுப் பொன் மயமான பனிமலை ஏறிப் போனவன் உங்கள் சிவபெருமான் அல்லோடி என்றும்.
    காதல் கொண்டு தம்பியோடு சீதை பொருட்டாகக் கடல் கடந்து போனான் உங்கள் கண்ணன் அல்லோடி என்றும் பள்ளியர்கள் பேசுவதைக் கீழ்வரும் பாடல் காட்டுகிறது.
    மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப்
    பொன்னின் மாயமாம் - பனி
    மலையேறிப் போனான் உங்கள்
    மத்தன் அல்லோடி
    காதலித்துத் தம்பியுடன்
    சீதை பொருட்டால் - அன்று
    கடலேறிப் போனான் உங்கள்
    கண்ணன் அல்லோடி

    (முக்.பள். 165)

    (மத்தன் = சிவன்)
    அடுத்து வருவது பெரியபுராணத்தில் வரும் செய்தி. சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று, திருமணத்தைத் தடுத்தார்; சுந்தரர் தமக்கு அடிமை என்று வாதிட்டார். இதனால் கோபமுற்ற சுந்தரர் அந்த முதியவரைப் பார்த்துப் 'பித்தரோ நீர்!' என்று கேட்டு ஏசுகிறார். (தடுத்தாட்கொண்டபுராணம்) இந்தச் செய்தியையே மூத்த பள்ளி இங்கே குறிப்பிடுகிறாள். சுந்தரன் திருமணத்திலே வல்வழக்குப் பேசிச் சென்று அவன் வாயால் வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் (சிவன்) அல்லோடி.
    சிசுபாலன் புலிபோல எழுந்து நின்று வையவே சபை நடுவிலே ஏழை போல ஒடுங்கி நின்றான் உங்கள் நீலவண்ணன் (கண்ணன்) அல்லோடி!
    வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
    வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன்

    அல்லோடி
    புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே - ஏழை
    போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி

    (முக்.பள். 167)

    (சிசுபாலன் = பாரதத்தில் வரும் ஒரு பாத்திரம், நீலன் = திருமால்)
    இடுப்பிலே சுற்றிக் கட்டுவதற்கு நாலுமுழத் துண்டு கூட இல்லாமல் புலித் தோலை உடுத்திக் கொண்டான் உங்கள் சோதி (சிவன்) அல்லோடி. கற்றையாகச் சடையைக் கட்டி இடுப்பில் மர உரியையும் (ஆடை) கட்டிக் கொண்டான் சங்கு கையனாகிய உங்கள் திருமால் அல்லோடி

    சுற்றிக் கட்ட நாலுமுழத் துண்டும் இல்லாமல் - புலித்
    தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி
    கற்றைச் சடை கட்டி மரஉரியும் சேலைதான் - பண்டு
    கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையன்

    அல்லோடி
    (முக்.பள். 169)

    (சோதி = சிவன், சங்குக் கையன் = திருமால்)
    ஏறிச் செல்வதற்குத் தக்க ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின்மேல் ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி! வீறாப்பான பேச்சு என்னடி? அந்த மாடு கூட இல்லாமல் போனதால்தான் பறவை (கருடன்) மீது ஏறிக் கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி!

    ஏறவொரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில்
    ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி
    வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல்-பட்சி
    மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி

    (முக்.பள். 171)


    (பட்சி = பறவை, கீதன் = திருமால்)
    இவ்வாறு பேசிக்கொண்டே வந்த இருவரின் ஆத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டே வந்தது. அவர்கள் பேச்சிலே ஒத்துப் போகும் எண்ணமும் பிறந்தது.
    ''மருதூர்ப் பள்ளி என்னதான் கோபப்பட்டாலும் சீர் அழியச் சொல்லலாமோ?'' என்று மூத்தபள்ளி கேட்க இளையபள்ளி ''முதலில் வைதவரை வாழ்த்தினவர் உலகத்தில் உண்டோ'' என்று வினவிச் சமாதானம் ஆனாள் (முக்.பள். 173)
    ''நீயும் பொறு. நானும் பொறுத்தேன். நம் உறவினர்கள் சூழ்ந்திருக்க நாம் இருவருமே ஒற்றுமையாகக் கூடி வாழலாம்'' என்று கூறிய பள்ளியர் முக்கூடல் அழகர் பாதங்களை வாழ்த்திப் பாடுகின்றனர். சமாதானம் ஆகி ஒன்று சேர்கின்றனர்.
    இவ்வாறாகப் பள்ளியர் சண்டை முடிவுக்கு வருவதோடு முக்கூடற் பள்ளு நிறைவு பெறுகின்றது. சைவ, வைணவப் பூசல் அந்தக் காலத்தில் இருந்ததை ஏசல் வெளிப்படுத்துகிறது. என்றாலும் இரு சமயங்களின் பிணைப்பை நிறைவாக வலியுறுத்தி முழுமை பெறுகிறது. பள்ளியர் ஏசுவது என்பது திட்டிக் கொள்வதாக ஆகாது. ஏசுதல் என்ற உத்தி மூலம் சமயப் பெருமையைக் கூறுவதே நோக்கமாகும்.
    • சிலேடை
    விதை வகைகள் மாட்டுவகைகள் முதலியவற்றைக் கூறும் புலவர் சிலேடை நயம் தோன்றுமாறு பாடலை அமைத்துள்ளார். ஒரு சில சான்றுகளைப் பார்ப்போம்.
    • ஆயிரம் மல்லியன்
    மாடுகள் பற்றிப் பண்ணைக்காரனிடம் கூறிவரும் பள்ளன் ஆயிரம் மல்லியன் எனும் மாடு மேல்திசை நோக்கி ஓடிப்போனது; அது எங்குப் போயிற்றோ இன்னமும் திரும்பி வரக்காணோம் என்று கூறுகிறான். இக்கூற்றில் ஒரு சிலேடை மறைந்துள்ளது. ஆயிரமல்லியன் என்பது ஆயிரமல்லி என்ற ஊரில் வாங்கிய மாடு என்று பொருள்படும். இதனைப் பிரித்து ஆயிரம் அல்லியன் என்று பொருள் காணமுடியும். ஆயிரம் அல்லி மலர்களை மலரச் செய்த சந்திரன் என்று ஒரு பொருள் உண்டு. ஆயிரம் இதழ்களை உடைய தாமரையை மலரச் செய்த சூரியன் எனவும் ஒரு பொருள் உண்டு. இவ்வாறு மலரை மலரச் செய்தவன் மேல் திசையில் மறைந்தான் என்பது இத்தொடரின் சிலேடைநயம் ஆகும்.(முக்.பள்.70).
    'ஒற்றைக் கொம்பன் எனும் காளையைத் தாண்டவராயன் என்பவன் உள்ளூர்க் கோயிலில் அடைத்து வைத்துவிட்டான் என்று ஒற்றைக் கொம்பன் காளையைப் பற்றிப் பள்ளன் கூறினான். இத்தொடரிலும் ஒரு சிலேடை உள்ளது. ஒற்றைக் கொம்பனாகிய யானைமுகனைத் (விநாயகன்) தாண்டவராயனாகிய சிவபெருமான் (நடராசன்) தன்னோடு கோயிலிலேயே வைத்துக் கொண்டான் என்பது சிலேடை ஆகும். (முக்.பள்.71).
    இவ்வாறு புலவர் சிலேடைநயம் தோன்றுமாறு பாடல்களை அமைத்தவிதம் படித்து இன்பம் அடையத்தக்கது.

Thursday, August 10, 2017

அம்பிகாபதி அமராவதி - 15 -

அமைச்சர்: ஆம், அன்னையே! கம்பர் தம் நூலின் கடவுள் வணக்கச் செய்யுட்களைப் படித்தவுடனேயே நம் புலவர்கள் ஒருவர் பின்னாரொருவராய் அவற்றின்கட் பிழை கண்டு வினவவும் அவற்றிற்கு அம்பிகாபதியார் விடை சொல்லவும் ஆக ஒரு பெருஞ் சொற்போர் நிகழ்ந்தது! கடைசியாகச் சாக்கியப் புலவர் கூறிய எல்லாம் பொய் யென்னுங் கொள்கையினால் ஒரு பெருங் குழப்பமும் உண்டாயிற்று.
அரசன்: பார்த்தீரா நம்பிப் பிள்ளே! கடவுளும் பொய், உயிரும் பொய், உலகமும் பொய், எல்லாம் பொய் என்று நம் சாக்கியப் புலவர் கூறியது எத்துணைப் படுபொய்யா யிருக்கின்றது! இதுவும் ஒரு கொள்கையா! இதுவும் ஒரு மதமா! இதற்கு அம்பிகாபதி சொல்லிய விடையைப் பார்க்கிலு:ம், நமது துத்தி அதற்குக் கொடுத்த சாட்டையடியே திறமான விடை! (துத்தி அது கேட்டு விலாப்புடையை அடத்துக்கொண்டு குதிக்கிறான்)
அரசி: (நகைத்துக் கொண்டே) துத்தி அதற்கு யாது சொன்னான் அரசே!
அரசர்:சாக்கியப் புலவர் எல்லாம் பொய் என்று சொன்னவுடனேயே இவன் என்னை விளித்து, அப்படியானால் 'நான் இதோ இருக்கிறேனே! என்னைக்கூடப் பொய்யென்று சொன்னால் எனக்கு அழுகை வருது' என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டான் . அவையின் ரெல்லாரும் வயிறு குலுங்கக் குலுங்க நகைத்தனர். அதன் பின் என்னைச் சுட்டிக்காட்டி, 'அரசே! நீங்கள் கூடப் பொய்யா?' என்று அவன் வினவ, அவையினர் அனைவருஞ் சாக்கிய புலவரை நோக்கியபடியாய் அடங்கிவிட்டனர். மேலும் அவன் 'இந்த உலகமெல்லாம் பொய்யென்றாரே ; அப்படியென்றால் இந்த இரவில் எனக்கு உணவு ; அதுவும் பொய்யாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ' என்ற கோணற்கும்பிட்டுடன் கொச்சையாய்ப் பேசவே, பின்னும் எல்லாரும் பெரிதும் சிரித்தனர்!. சாக்கிய புலவர் முகங்கருகிப்போயிற்று . அது கண்டு யான் ' அவர் தமது மதக்கொள்கையைச் சொன்னாரே தவிர , எல்லாம் உடனே பொய்யாய் விடுமென்பது அவர் கருத்தன்று ' எனக்கூறி எல்லாரையும் அமைதிப்படித்தினேன்.
அரசி: துத்தி சொல்லிய சொற்களால் சாக்கியபுலவர் தமது கொள்கையின் படி தாமும் பொய்யாகல் வேண்டும். அவர் உட்கொள்ளும் உணவும் பிற நுகர்பொருள்களும் பொய்யாகவே ஒழியவேண்டும் என்பது எளிது போதரலால், அவர் முகங்கருகாமல் வேறென் செய்வார்! ஏடா துத்தி! உனக்கு இன்றிரவு இரட்டைச்சாப்பாடு .
கோமாளி: அம்மா, அம்மா! மாராசா எனக்கு மூனுசாப்பாடல்லோ ரொம்ப ரொம்ப தாரேனெண்ணு சொன்னாங்க. நீங்க ஒரு சாப்பாட்டெ குறைச்சுட்டீங்களே!
அரசி:(நகைத்து) அப்படியானால் , நான் உனக்கு நான்கு சாப்பாடு தருகிறேன்
அரசர்: கம்பர் திரும்பி வரும் வரையில் அம்பிகாபதி தான், நம் புதல்விக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும். நமது நிலையுந் தனது நிலையும் நன்குணர்ந்த தக்கோனாதலால் ஏதுந் தவறிழைப்பான் அல்லன் என் மகளும் தனது மேதகு நிலையுணர்ந்து மிக்கோலாதலால், சிறிதும் பிழைபடாள் .
அமைச்சர்: மன்னர் பெரும! இருவரும் தக்கோரென்பதில் தட்டில்லை? என்றாலுகூட, அரசியார் சொல்லுவதுங் கருதற்பாலது. ஆதலால், யான் ஒரு சூழ்ச்சி சொல்லுகின்றேன். அது பிராட்டிக்குந் தமக்கும் எனக்குமல்லது பிறரெவர்க்குந் தெரிதலாகாது. (அந்த ரகசியம் சொல்லப்படுகிறது)
அரசன்: நம்பிப்பிள்ளே! இன்னும் ஒரு சொல். நம் புதல்வியின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்..நம் மருகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் திருமுகம் நாளையே விடுத்து, அவனை மதுரையினின்றும் இங்கு வருவியுங்கள்.
அமைச்சர்: அங்ஙனமே செய்கின்றேன் பெருமானே.

Tuesday, January 30, 2007

Friday, January 12, 2007

விவேகானந்தரின் பிறந்த நாள்

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

ஒலி விவேகானந்தர்


எழுத்து வடிவம்

Saturday, December 30, 2006

சதாம் தூக்கு


பாக்தாத் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் தூக்கு தண்டனை இன்று காலை 8.30 மணி அளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈராக் தொலை காட்சி நிறுவனம் அல் ஹுரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் துஜெயில் என்ற இடத்தில் 1982ம் ஆண்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் 148 பேரை படுகொலை செய்த வழக்கில் சதாம் உசேன், அவரது சகோதரர் பர்சான் அல் திக்ரிதி, முன்னாள் தலைமை நீதிபதி அல்பந்தார் அல் சதூன் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எல்லா ஊர்களிலும் தூக்கில் போடப்படுபவர்களுக்கு தான் முகத்தை மூடுவார்கள் ஆனால் இங்கு தூக்கில் ஏற்றும் பணியாளர்களுக்கு முகத்தை முடியுள்ளார்கள்.

Tuesday, December 26, 2006

இன்று சுனாமி நாள்

இன்று சுனாமிநடைபெற்ற நாள்

இதற்குமுன் இவ்வாறு நடந்ததா? ஆம் நடந்தது !!! இமயமலைகூட ஒரு காலத்தில் தண்ணீருக்குள் இருந்ததாம் அரியலூர் பகத்திலுள்ள ஊர்களும் ஒரு காலத்தில் கடலால் முழ்கப்பட்டிருந்தது அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன.


பல்வேறு ஊழிகளிற்றோன்றிய கடற் பெருக்குகளால் நிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம்மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது உய்த்துணர்வுகொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின்றனர்.

ஸ்காட் எலியட் என்பவர் இவ்வுலகில் ஐந்து பெருங்கடற்பெருக்குகள் உண்டாயினவென்றும், அவற்றுள் முதலாவது பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், மூன்றாவது இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், நாலாவது எண்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், ஐந்தாவது கி.மு. 9564இல் உண்டானதென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இப்போது அட்லாண்டிக் கடல் அலைகொழிக்கின்ற இடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதில் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (Posedonis) என்னும் தீவு கி.மு. 9564ஆம் ஆண்டில் உண்டான வெள்ளத்தால் மறைந்ததெனச் சொல்லப்படுகின்றது. இதற்குச் சான்று இலண்டன் நூதனப் பொருட்காட்சிச் சாலையிலே உள்ளதும் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகி (Troano Mss.) தொறானோ கையெழுத்துப் பிரதியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-

"ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன்

திங்கள் 13ஆம்நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளிலுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன. இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக்கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில் மறைந்துபோயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில்

நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,000,000

மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்துபோயின." என்றுகூறுகின்றார்.

என்னமோ அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியம் எது எப்பொழுது நடக்கும் என்று.

Sunday, November 12, 2006

அதிவேக விமானம்







இரவு மற்றும் பகலை வரையறுக்கும் கோட்டினை (Terminator) வேகத்தால்
வெல்லக்கூடிய தன்மை கொண்ட பயணிகள் விமானம் என்று சொல்வதற்கு ஒரே விமானம் தான் இருந்தது.... காண்காட்!

இந்த தன்மை உள்ளதால், மாலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் அமெரிக்காவை நோக்கி பறக்கும் காண்காட் சூரியனை பின் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது.

அ°தம சூரியனுடன் பயணம் செய்து பயணத்தின் இறுதியில் சூரியனும் காண்காடும் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் சென்று சேரும்போது அமெரிக்க மக்களுக்கு அது உதய சூரியன்!

1986 நவம்பர் 1-ம் தேதி ஒரு காண்காட் விமானம் 32 மணி நேரம் கொண்டு பூமியை ஒரு தடவை வலம் சுற்றியது வரலாறு சம்பவம்!

1950 காலகட்டத்தில் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முன்னணியில் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து வடிவமைத்தது இந்த அதிசய விமானத்தை.

இதற்கென்று அந்த இரண்டு நாடுகள்க்கிடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அதிகமான சத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மற்ற நாடுகள் இந்த விமானம் வாங்குவதற்கு முன் வரவில்லை.

ஒரு விஷயத்தை மட்டும் அந்த காலத்தில் அவர்களால் சரியாக கையாள முடியாமல் போனது. இந்த விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளி வரும் ஒலியை குறைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

ஜெட் ரக இயந்திரங்களின் ஒலி 150 டெசிபல் என்ற அளவில் இருந்தபோதும் கூட காண்காட் விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளிவரும் சத்தம் 200 டெசிபெல் அளவில் இருந்தது.

இதே காரணத்தால் பல்வேறு நாடுகள் காண்காடை வரவேற்கவில்லை. மலேஷியா நாடு காண்காட் ரக விமானங்கள் அந்த நாட்டு வான்வெளிப்பகுதியில் பறப்பதற்கும் கூட தடை விதித்தது.

கடைசியில் பிரிட்டனின் பிரிட்டீஷ் எயர்வேஸும், பிரான்சின் எயர் பிரான்சும் சேர்ந்து இந்த விமானங்களை வைத்து சேவை புரிந்து வந்தார்கள்.

60,000 அடி உயரத்தில் ஒலியைவிட அதிகமான வேகத்தில் பறந்து செல்லக்கூடிய சக்தி வாய்ந்த இந்த காண்காட் ரக விமான தயாரிப்பு மற்றும் சேவைகள் 2003 ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது.

மொத்தம் 20 காண்காட் விமானங்களை தயாரித்து, 26 ஆண்டுகள் சேவை புரிந்த காலையளவில் ஒரே ஒரு காண்காடு விமானம் மட்டும் தான் விபத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து பறந்து உயரும் காண்காடின் டயரில், காண்காட் புறப்படுவதற்கு சற்று முன் தறையிறங்கிய இன்னும் ஒரு விமானத்திலிருந்து ஊர்ந்து விழுந்த ஒரு டைட்டானியம் கம்பி குத்தி டயர் பஞ்சராகி விட்டது, மேலும் எரிபொருள் டேங்க் சேதம் அடைந்ததால் பறந்து உயர்ந்த சில நொடிகளில் அந்த விமானம் பற்றி எரிந்தது.

இந்த விமான சேவை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் அதன் சத்தம் தான். சத்தம் என்றால் அது வெறும் சத்தம் அல்ல! இயற்கையின் இடியை வெல்லும் தனி காண்காட் இடிமுழக்கம் !

ஒரு தடவை ஒரு காண்காட் விமானம் தில்லி விமான நிலையத்தில் தறையிறங்கியபோது அந்த விமான நிலையத்தில் மட்டுமல்லாமல் வெளியே கண்ட்ரோல் டவர் மீதுள்ள கண்ணாடி ஜன்னல்கள் அத்தனையும் நொறுங்கி விட்டது!

காண்காட் ஒலியைவிட இரட்டை வேகத்தில்

Supersonic


பயணம் செய்யும்போது அந்த விமானத்தின் பாதையில் செயற்கை மேகங்களே உருவாகும் நிலைமை இருந்தது.

விமான சேவை துறையில் என்ன தான் புரட்சிகள் வந்தாலும், காண்காடுக்கென்று ஒரு தனி இடம் வரலாற்றில் உண்டு.

விடைபெற்றது சாதாரண விமானம் அல்ல - விமானங்களின் பேரரசர்!
சுட்ட இடம்
http://www.webulagam.com/news/history/0605/19/1060519011_1.htm

Wednesday, October 25, 2006

மன்னர்கள்






























































மேலுள்ளவர்கள் அனைவரும் மன்னர்களாக இருந்தவர்கள் கையில் தடியுடன் இருப்பவர்களும் மன்னர்களாக இருந்தவர்கள்தான்.
http://freepages.genealogy.rootsweb.com/%7Eroyalty/files/Piclist5.html

Wednesday, September 20, 2006

சறுக்கு விளையாட்டு

தாவ முயன்று தடுக்கி விழும் நண்பர் முயற்சியை விட வில்லை முயற்சியுடையார் இவர்தான்

Monday, September 18, 2006

மானிடம் அடிபடும் ஆண்

மனிதனிடம் மற்போர் செய்யும் மான் உங்களுக்குமட்டும் தான் கைகளுண்டா?
எனக்கும் உண்டு ஒருகை இல்லை இருகை பாத்துவிடுகிறேன் நான் கொம்பை பயன் படுத்த வில்லை எனது கைகளாலே சண்டையிடுகிறேன்,

Thursday, August 10, 2006

அம்பிகாபதி அமராவதி - 19 -

மூன்றாம் நிகழ்ச்சி: மூன்றாங் காட்சி

களம்: தஞ்சைச் சிவபிரான் திருக்கோயில்

நேரம்: காலை

{சோழன், சோழன் மனைவி, அவர் மகள் அமராவதி, குலசேகர பாண்டியன், அமைச்சர், காவலாளர் முதலியோர் வருகின்றனர்.}


சோழன்:

இவ் விளவேனிற்காலத் துவக்கத்தின் காலை வேளை பனிக்காலக் கழிவில் தோன்றியிருத்தலால், தண்ணெனும் புனலிற் தலைமுழுகி இறைவனைத் தொழச் செல்வார்க்கு ஈது எவ்வளவு இனியதாய்க் காணப்படுகின்றது! சிறிதே மூடிய பனியினைக் கீறிக்கொண்டு புறப்படும் பகலவன் அரக்கரின் மாயவலையினைக் கிழித்துக் கொண்டு புறப்படுந் திருமாலின் திகிரிப் படைபோல் திகழ்தலைப் பார்மின்கள்!


அமைச்சர்:

ஆம் பெரும!இக்கதிரவனது வட்ட வடிவந் தேன்முற்றிய தேனடை போலவும், அதிலிருந்து பாயுங் கதிரொளிகள் அவ்வடையிலிருந்தொழுகுந் தேன் போலவும், இரவெல்லாங் கூடுகளில் அடங்கிக்கிடந்து பசியோடு எழும் பல்வகைப் பறவைகளும் அவ்வொளியினை நோக்கிப் பறந்து செல்வது அத்தேன் ஒழுக்கினைப் பருகச் செல்வது போலவுங் காணப்படுகின்றன.


அரசி:

அமைச்சர் இத்தோற்றத்தினை உவமித்துச் சொல்லிய பான்மையில் இயற்கைக் காட்சியே ஓர்அழகிய ஓவியமாய்த் துலங்கா நிற்கின்றது! மேலும் பாருங்கள்! கதிரவன் ஒளிதோய்ந்த இக்கோயிற் கொடு முடிமேற்காணுந் திருக்குடமானது, " வானவர் பாற்கடலிற் பெற்ற குடத்தின் அமிழ்தமானது என்றுமே சாவா நிலையினைப் பயப்பதன்று: மற்று என்னகத்தே நிரம்பிய அமிழ்தமோ சிவபிரான் திருவருட் பேரமிழ்தாமாகும்; அதனை, நீவிர் பருகி என்றுமழியா அருட்பேரின்பத்தைப் பெறும் பொருட்டே இக்கோபுரமாகிய பூதத்தின் தலைமேற் சுமக்கப்பட்டு வானளாவி நிற்கின்றேன்" எனப் புகன்று திகழ்வதுபோற் காணப்படுகின்றது!


அமைச்சர்:

! ; யாங்கள் கூறிய புனைந்துரையினும் அரசியர் இயம்பிய புனைந்துரையே, இறைவனை வழிபடச் செல்லும் எமக்கு இறைவன்றன் அருள் வழக்கத்தினை நினைப்பித்து, இந்நேரத்திற்குச் சாலச்சிறந்ததாய்த் தோன்றுகின்றது!


கோமாளி:

ஐயையோ! இந்தக் கோவுரம் பூதமா? இதின் வாய்க்குள்ளவா நாம்ப எல்லாம் நுளையப்போறோம். அம்மா! மாராசா! நான் வரமாட்டேன். என்னை விட்டுடுங்கோ! என் பெண்டாட்டிக்கி யாரு துணை? எனக்குச் சாமியும் வேணாம் பூதமும் வேணாம்.


{எல்லோருஞ் சிரிக்கின்றனர்}


சோழன்:

ஏடா துத்தி! இது கோபுரந்தானடா. பூதம் அன்று; பூதம்போற் பெரிய வடிவமாகக் காணப்படுவதால் அரசி அங்ஙனஞ் சொன்னாள். உனக்குக் கண் இல்லையா? நன்றாய்ப் பார்! அஞ்சாதே!


கோமாளி:

(தன் கண்களைத் தடவிப் பார்த்து) ஆமா, மாராசா! எனக்குக் கண் இருக்கு, இருக்கு, ஆமா இது கோவுரந்தான். அது மேலே உள்ள குடத்திலே அமுதம் இருக்கு என்று அம்மா சொன்னாங்களே; அதிலே எனக்கு (குடங்கையைக் காட்டிக் கெஞ்சுகின்றான்.)


சோழன்:

நாம் கோயிலினுள்ளே சென்று சிவபிரானையும் பிராட்டியையும் வணங்கியதும், முக்கனியுங் கற்கண்டுந் தேனும் பாலும் கலந்த தேவாமிர்தம் உனக்கு ஏராளமாய்க் கிடைக்கும்.

(கோமாளி முடக்கிய கையை விலாப்புடையில் அடித்துக் கெண்டும் நாவைச் சுவைத்துக்கொண்டும் வர, எல்லாரும் நகைத்தபடியாய்க் கோயிலினுள்ளே சென்று இறைவனையும் இறைவியையுந் தொழுது நிற்கக், குருக்கள் வழிபாடு நடத்த, முடிவில்)


சோழன்:

(அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் நன்கு பயின்று வரும் பயிற்சியினை இங்கே கடவுள் முன்னிலையிலும் நம் அரண்மனையிலும் பலகாற் பாடியும் ஆடியுங் காட்டியதனை நாங்கள் கண்டு களித்திருக்கின்றோம். ஆனால், இங்கே வந்திருக்கும் நின் அருமை மாமன் குலசேகர பாண்டியன் அவற்றைக் கேட்டதும் பார்த்ததும் இல்லை. ஆதலால் அம்மையப்பர் மேல் நீயே ஒரு கலிப்பாட்டு இயற்றி அதனை யாழில் இட்டுப் பாடி அதனை நடித்துங்காட்டி எங்களை மகிழ்வி.


{குலசேகரன் அமராவதியின் பாட்டையும் ஆட்டத்தையுங் காணவுங் கேட்கவுந் தனக்கெழும் பேராவவினை முகத்தாலுங் கையாலுங் குறிப் பிடுகின்றான்; எல்லாரும்அங்ஙனமே; ஆனால், அமராவதி நாணத்துடன் நிற்க.}


அரசி:

அம்மா! குழந்தே! இதற்கேன் இவ்வளவு வெட்கம்! குலசேகரன் என்னுடன் பிறந்த என் தம்பி தானே. அவன் நீள உன்னுடன் பழகாவிட்டாலும் அவன் உனது கல்வித் திறமையைக் காணுதற்கு எல்லா வகையிலும் உரிமையுடையவனே. ஆகையால் உன் தந்தையார் செல்லுகிறபடியே செய்! (அமராவதியின் முகத்தை யுயர்த்தி நெற்றியைத் துடைக்க)


அமராவதி:

(தாய் தந்தையரை வணங்கி ) அப்பா விரும்பியபடியே செய்கிறேன் அம்மா! (எல்லாருங் கடவுளெதிரே அமர, அமராவதியும் அமர்ந்து யாழைக் கையிலெடுத்துத் தான் இறைவன்மேல் இய்ற்றிய இசைப்பாவினை அதிலிசைத்துப் பாடுகின்றாள்.)


தேவிற் சிறந்த சிவனே செழுங்குவளைப்

பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கினையே

பூவிற் பொழிந்த புகழுமையைப் புல்கிலையேல்

நாவிற் புகலுதற்கு நல்லுயிரொன் றுண்டாமோ?


மங்கையொரு குறுடையாய் மாதவனாய் நீயமர்ந்து

பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டனையே

பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டிலையேல்

இங்குளார் எல்லாம் இணைவிழைச்சில் இழிகுவரே!


முப்புரங்கள் செற்றனையோ மும்மலங்கள் செற்றனையோ

எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கெது சிறப்பு?

எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கிரண்டொன்றாம்

அப்புரங்கள் அழித்ததனை அருஞ்செயலாய் அறைகுவரோ?


குலசேகரன்:

! ! எளிதாக இனிதாகத் தமிழ்ப் பாட்டுக் காட்டியது மல்லாமல் அமராவதி அதனை யாழில் இசைத்துப் பாடியதும் என்னறிவையே பிறிதாக்கி விட்டது!


சோழன்:

(மகிழ்ந்து) மைத்துன! இப்பாட்டின் பொருளைப் புதல்வி நடித்துக் காட்டுவதும் நன்றாயிருக்கின்றதா வென்று பாருங்கள்! (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ பாடிய இவ்வினிய பாட்டின் பொருளைச் சிறிது நடித்துக் காட்டி எல்லாரையும் உவப்பி!

{அமராவதி அங்ஙனமே நடிக்க எல்லாரும் மிக மகிழ்கின்றனர்)


குலசேகரன்:

அமராவதியின் நடக்காட்சி பேரின்பக் காட்சியாகவே விளங்குகின்றது! இதற்கு மேல் எனக்கு ஏதுஞ் சொல்லத் தெரியவில்லை.


சோழன்:

மைத்துன! நீங்கள் மீண்டும் மதுரை செல்லும் வரையில் இடை இடையே கன்னிமாடத்திற்சென்று அமராவதியின் முத்தமிழ்ப் பயிற்சியையுங் கண்டுங் கேட்டுங் களிக்கலாம்.


குலசேகரன்:

அதற்காக உங்களை மிகவும் வணங்குகின்றேன். அமராவதியின் ஆடல் பாடல்களைக் கண்டு கேட்டுக்களிப்பதினும் வேறெனக்கியாது வேண்டும்?

(எல்லாரும் அம்மையப்பரைத் தொழுதபின குருக்கள் அரசன் முதலயோர்ககெல்லாம் திருநீறளித்து அமராவதிக்கு அஃதளிக்கையில்)


குருக்கள்: முத்தமிழ்ச் செல்வமே! முத்தமிழையுமே முக்கண்ணாய்க்கொண்ட சிவபிரான் பிராட்டி திருவரளால் நீ நினக்கினிய காதலனை விரைவிற்பெற்று இனிது வாழக் கடவாய்!

{கடவுட்குப் படைத்த பூ பழும் முதலியன பெற்றுக்கொண்டு எல்லாரும் அரண்மனைக்கு ஏகி விட்டனர்)
வரும் 19 ல்

Tuesday, May 30, 2006

அம்பிகாபதி அமராவதி - 18 -

அமராவதி:-

ஆம். அதற்கு இதனை ஒப்பாக உரைத்தல் பொரும்பாலும் இசையாததேயாம். ஆயினுஞ், சுவாமி! காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், திலகவதியார், பரவையார், சங்கிலியார் முதலான தெய்வக் கற்பரசிகளின் வரலாறுகளை ஆசிரியர்

சேக்கிழார் நுவலுமாறு போலவே, கண்ணகி, மாதவி என்னும் கற்பணங்குகளின் வரலாறுகளை ஆசிரியர் இளங்கோவடிகளும் எமது நெஞ்சம் நெக்கு நெக்குருக இயம்பி இருக்கின்றார். அவ்வாற்றால் அவ்விருகாப்பியங்களுந் தம்முள் ஒக்குமன்றோ?

அம்பிகா:

இளவரசியார் அவ்விரண்டுக்கு முள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டிய நுட்பம் பெரிதும் பாராட்டற்பாலது. இனி மெய்ந்நெறி பிறழ்ந்தவரக்களுங் கற்பிற் சிறந்த காதன் மனைவியர்க்குப் பிழைசெய் தொழுகினவர்களும் முன்னர் ஒருக்கப்படினும் பின்னர் அருள் செய்யப்பட்டமையினை அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகள் முதலானவர்கள் பால் வைத்துச் சேக்கிழார் கூறுமாப்போல் இளங்கோவடிகள் கூறவில்லையே!

அமராவதி:-
அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகளெல்லாம் எந்த நிலையிலும் சிவபிரான் திருவடிக்கட்பதிந்த பேரன்பிற் சிறிதும் பிறழாதவர்கள்; ஆதலால் அவர்கள் தாஞ்செய்த பிழைக்காக முன்னர் ஒருக்கப் படினும், பின்னர் அருள் செய்யப்பட்டார்கள், மற்றும் கோவலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் அவர்போல் இறைவன்பாற் பதிந்த மெய்யன்பினராதல் காணப்படாமையின், அவர் ஊழ்வினையின் பாலராய்க் கிடந்து ஒறுக்ப்பட்டு மடிந்தனர்! அவர் அருளின் பாலராய்நில்லாமையால், அவரை "ஊழ்வினை உருத்து வந்து ஊட்"டியதென இளங்கோவடிகளும் இயம்பி இருக்கின்றனர்.


அப்பிகாபதி:-
அது தான் உண்மை! இவ்வேற்றுமையிலும் அவ்விரண்டு காப்பியங்களும் ஓர் ஒற்றுமையுடை யனவாயே திகழ்கின்றன. அது நிற்க. திருத்தொண்டர் புராணத்தில் சிவபிரானுக்கு முதன்மை சொல்லப்பட்டியிருத்தல் போல சிலப்பதிகாத்தில் சொல்லப்பட்டுளதோ.


அமராவதி:-
சொல்லப்பட்டிருக்கின்றது சாமி காவிரி பூம் பட்டினத்திலிருந்த தெய்வங்களின் திருக்கோவில்களைச் சொல்லுங்கால் பிறவா யாக்கை பெரியோன் கோவிலும் என்று சிவபிரான் கோவிலையே ஆசிரியர் இளங்கோவடிகள் இந்திர விழா ஊர்எடுத்த காதையில் முதற்கண் வைத்துரைக்கின்றார். மற்றை தெய்வங்கள் எல்லாம். பிறந்து இறப்பன ஆதலால் அவை உண்மையில் தெங்வங்கள் ஆகா அதனால் அவை பெரியனதும் ஆகா . மற்று சிவபெருமான் ஒருவனே பிறவா ஒளியுருவினாகலான் அவனே உண்மையான தெய்வமாவன் அதனால் அவனே பெரியன்(மகாதேவன்) ஆவன். என்று அச்சொற்றொடரில் அறிவுறத்தியிருக்கின்றனர் இத்தகைய மெய்ம்மைச் சொற் தொடரால் மற்றைய தெய்வங்களை வேறு எங்கும் அவர் ஓதிற்றிலர்.


அம்பிகாபதி: உண்மை! உண்மை !! சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களிலும் இளங்கோவடிகள் முதன்மைக்கூறியிருப்பினும், ஈதொன்றே போதும். அது நிறக, திருத்தொண்டர் புராணத்திற்குஞ் சீவக சிந்தாமணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைஞ் சிறிது நுவலுங்கள்!


அமராவதி: சிந்தாமணி, சீலகன் தன் கலையுணர்வின் திறத்தாலும், போர்திறத்தாலும், நுண்ணறிவாலும் எட்டு மனைவியரை மணந்து ஒருவாழ்க்கை வரலாற்றை சொல்கின்றதேயன்றி, செயற்கறியசெய்த பெரியார் வரலாறுகளை திருத்தொண்டர் வராலாறுபோல் சொல்கின்றிலது. மேலும் மக்களை மேல்நிலைக்கண் உய்க்குந்தெய்வ அருள் விளககுமுஞ் சிந்தாமணியிற் காணப்படுகின்றிலது. அது வல்லாமலுஞ் சீவகன் வரலாறு உண்மை என்பதற்குச் சான்றுமில்லை. பெரிய புராணம் மெய்யடியார் வரலாற்றின் உண்மையினை உள்ளபடியே நுவல்வது; அவ்வரலாறுகளின் உண்மைக்கு சான்றுகள் மிகுதியாம்; உள்ளன. உண்மையே கூறும் தமிழ் வழக்கிற்கு சீவக சிந்தாமணி சிறிதும் ஒவ்வாது.


அம்பி: இரண்டுக்கும் வேற்றமை சொன்னீர்கள் ஒற்றுமை ஏதேனும் உண்டா?


அமரா: வல்லோசையின்றி தமிழ் சுவை துளும்பும் இணிய மெல்லோசை வாய்ந்த நடையில் ஆக்கப்பட்டிருத்தலின் சிந்தாமணியுந் திருத்தொண்டர் புராணமும் ஒற்றுமையுடையன எனவே உறைக்கலாம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த வகையிலும் கூட பெரிய புராணமே சிந்தாமணியிலும் சிறந்து திகழ்கின்றது.


அம்பி: ஆம், ஆம் நடையழகிற் சிந்தாமணியை விட சிலப்பதிகாரமே பெரியபுராணத்திற்கு ஒப்பாக நிற்கற்பாலது. பெரும் மாட்சியிலோ பெரியபுராணத்திற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ நிற்க வல்ல காப்பியமேதுமேயில்லை. இளவரசியார் இலக்கியத் துறையில் இத்துணை அழகாக இறங்கி அவ்வந் நூற்றான்மை ஆய்ந்தெடுத்தறிந்திருப்பது மிகவும் வியக்கற்பாலது அது நிற்க, இலக்கணத்திலும் ஒன்று வினவி, அதற்கு மேல் இளவரசியார்க்கு வருத்தங் கொடாமல் நிறுத்துகின்றேன்.


அமராவதி: ஆசிரியர்க்கு விடைகூறுவதிற் சிறிதும் அடியேற்கு வருத்தந்தோன்றவில்லையே


அம்பி: உவந்தேன் ஆசியர் தொல்காப்பியனார் ஆறறிவுடைய மக்களை மட்டுமே உயர்திணைஎனக் கொண்டு, 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே' என்று கூறினார் இக்காலத்தார்க்கு 'நன்னூல்' செய்த பவணந்தியாரோ , மக்கள், தேவர் ,நரகர் என்னும் முப்பாலரையும் உயர்திணை எனக்கொண்டு 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை' எனக்கூறுகின்றார். இவ்விரண்டில் எது தங்கட்கு பொருத்தமாக காணப்படுகின்றது?


அமாராவதி: இலக்கணமென்பது எல்லா சமயத்தார்க்கும் பொதுவான நிலையில் நின்று, ஒரு மொழியின் சொற்பொருள் அமைதிகளை கண்ணாற் கண்டு அறிவான் ஆராய்ந்து காட்டுவது. கட்புலணாகாதவைகளை சிறுபான்மை சொல்ல நேர்ந்தால் மொழியமைதியினளவுக்கு வேண்டும் துணையே அது கூறுதல் வேண்டும் இந்த முறையிற் பார்த்தால் ஆறறிவுடைய மக்களே உயர்திணை என்பது. எல்லாராலும் கற்புலனாக அறியப்பட்ட உண்மையாகும். மற்று, தேவர், நரகர் என்பார் எல்லாராலும் கட்புலனார் காணப்பட்டவரல்லர்; அதனால் அவரை உயர்திணை என்று கொள்வது எல்லார்க்கும் உடன்படான்று. ஆகவே தொல்காப்பியனார் மக்களை மட்டும் உயர் தினை என்று வரையறுத்துரைத்ததே சாலமும் பொருத்தமுடை தென கருதுகின்றேன்.


அம்பி: இளவரசியாரின் ஆராய்ச்சியறிவின் திறம் மிகவும் பாராட்டற்பாலது. இனி இப்பொது புறநானூற்றின் கடவுள் வணக்கச் செய்யுளை தொடங்கலாம்.

(அங்கனமே அமராவதி அதனைப் படிக்க அப்பிகாபதி அதற்கு பின்னர் சில செய்யுட்களுக்கும் உறைசொல்லி விடைபெற்று நண்பனுடன் இல்லஞ் செல்கின்றான்)
வரும்...19