Thursday, August 10, 2017

அம்பிகாபதி அமராவதி - 15 -

அமைச்சர்: ஆம், அன்னையே! கம்பர் தம் நூலின் கடவுள் வணக்கச் செய்யுட்களைப் படித்தவுடனேயே நம் புலவர்கள் ஒருவர் பின்னாரொருவராய் அவற்றின்கட் பிழை கண்டு வினவவும் அவற்றிற்கு அம்பிகாபதியார் விடை சொல்லவும் ஆக ஒரு பெருஞ் சொற்போர் நிகழ்ந்தது! கடைசியாகச் சாக்கியப் புலவர் கூறிய எல்லாம் பொய் யென்னுங் கொள்கையினால் ஒரு பெருங் குழப்பமும் உண்டாயிற்று.
அரசன்: பார்த்தீரா நம்பிப் பிள்ளே! கடவுளும் பொய், உயிரும் பொய், உலகமும் பொய், எல்லாம் பொய் என்று நம் சாக்கியப் புலவர் கூறியது எத்துணைப் படுபொய்யா யிருக்கின்றது! இதுவும் ஒரு கொள்கையா! இதுவும் ஒரு மதமா! இதற்கு அம்பிகாபதி சொல்லிய விடையைப் பார்க்கிலு:ம், நமது துத்தி அதற்குக் கொடுத்த சாட்டையடியே திறமான விடை! (துத்தி அது கேட்டு விலாப்புடையை அடத்துக்கொண்டு குதிக்கிறான்)
அரசி: (நகைத்துக் கொண்டே) துத்தி அதற்கு யாது சொன்னான் அரசே!
அரசர்:சாக்கியப் புலவர் எல்லாம் பொய் என்று சொன்னவுடனேயே இவன் என்னை விளித்து, அப்படியானால் 'நான் இதோ இருக்கிறேனே! என்னைக்கூடப் பொய்யென்று சொன்னால் எனக்கு அழுகை வருது' என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டான் . அவையின் ரெல்லாரும் வயிறு குலுங்கக் குலுங்க நகைத்தனர். அதன் பின் என்னைச் சுட்டிக்காட்டி, 'அரசே! நீங்கள் கூடப் பொய்யா?' என்று அவன் வினவ, அவையினர் அனைவருஞ் சாக்கிய புலவரை நோக்கியபடியாய் அடங்கிவிட்டனர். மேலும் அவன் 'இந்த உலகமெல்லாம் பொய்யென்றாரே ; அப்படியென்றால் இந்த இரவில் எனக்கு உணவு ; அதுவும் பொய்யாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ' என்ற கோணற்கும்பிட்டுடன் கொச்சையாய்ப் பேசவே, பின்னும் எல்லாரும் பெரிதும் சிரித்தனர்!. சாக்கிய புலவர் முகங்கருகிப்போயிற்று . அது கண்டு யான் ' அவர் தமது மதக்கொள்கையைச் சொன்னாரே தவிர , எல்லாம் உடனே பொய்யாய் விடுமென்பது அவர் கருத்தன்று ' எனக்கூறி எல்லாரையும் அமைதிப்படித்தினேன்.
அரசி: துத்தி சொல்லிய சொற்களால் சாக்கியபுலவர் தமது கொள்கையின் படி தாமும் பொய்யாகல் வேண்டும். அவர் உட்கொள்ளும் உணவும் பிற நுகர்பொருள்களும் பொய்யாகவே ஒழியவேண்டும் என்பது எளிது போதரலால், அவர் முகங்கருகாமல் வேறென் செய்வார்! ஏடா துத்தி! உனக்கு இன்றிரவு இரட்டைச்சாப்பாடு .
கோமாளி: அம்மா, அம்மா! மாராசா எனக்கு மூனுசாப்பாடல்லோ ரொம்ப ரொம்ப தாரேனெண்ணு சொன்னாங்க. நீங்க ஒரு சாப்பாட்டெ குறைச்சுட்டீங்களே!
அரசி:(நகைத்து) அப்படியானால் , நான் உனக்கு நான்கு சாப்பாடு தருகிறேன்
அரசர்: கம்பர் திரும்பி வரும் வரையில் அம்பிகாபதி தான், நம் புதல்விக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும். நமது நிலையுந் தனது நிலையும் நன்குணர்ந்த தக்கோனாதலால் ஏதுந் தவறிழைப்பான் அல்லன் என் மகளும் தனது மேதகு நிலையுணர்ந்து மிக்கோலாதலால், சிறிதும் பிழைபடாள் .
அமைச்சர்: மன்னர் பெரும! இருவரும் தக்கோரென்பதில் தட்டில்லை? என்றாலுகூட, அரசியார் சொல்லுவதுங் கருதற்பாலது. ஆதலால், யான் ஒரு சூழ்ச்சி சொல்லுகின்றேன். அது பிராட்டிக்குந் தமக்கும் எனக்குமல்லது பிறரெவர்க்குந் தெரிதலாகாது. (அந்த ரகசியம் சொல்லப்படுகிறது)
அரசன்: நம்பிப்பிள்ளே! இன்னும் ஒரு சொல். நம் புதல்வியின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்..நம் மருகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் திருமுகம் நாளையே விடுத்து, அவனை மதுரையினின்றும் இங்கு வருவியுங்கள்.
அமைச்சர்: அங்ஙனமே செய்கின்றேன் பெருமானே.